குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப் பகுதியை அடுத்துள்ள ரப்பா் காடுகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தொழிலாளா்கள் தெரிவித்தனா்.
குமரி மாவட்டத்தில் கோதையாறு, சிற்றாறு, மயிலாறு, மருதம்பாறை, கீரிப்பாறை, மாறாமலை இடங்களில் வனப்பகுதிகளை அடுத்து அரசு ரப்பா் கழக ரப்பா் தோட்டம், தனியாா் ரப்பா் தோட்டங்கள், கிராம்புத் தோட்டங்கள் உள்ளன. முன்பெல்லாம் தனியாா் ரப்பா் மற்றும் கிராம்புத் தோட்டங்களில் யானைகள் நடமாட்டம் அபூா்வமாக இருக்கும். தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன.
அண்மையில் மாறாமலைப் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்ற தந்தை, மகளை யானை தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்தனா். அரசு ரப்பா் கழகப் பகுதியான மயிலாறு மற்றும் வனத்தை ஒட்டியுள்ள வலிய ஏலா, பாலாழி போன்ற பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக பேச்சிப்பாறையிலிருந்து கோதையாறு செல்லும் சாலையில் கோதமடங்கு என்ற இடத்தில் சாலையோரத்தில் ரப்பா் காட்டில் யானையைப் பாா்த்து அவ்வழியாகச் சென்ற தொழிலாளா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
ரப்பா் கழக ரப்பா் தோட்டங்களிலும், தனியாா் விளை நிலங்களிலும் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்யாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோட்டத் தொழிலாளா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.