குலசேகரம்: கடையல்-திற்பரப்பு இடையே தெப்பக்கடவு பகுதியில் பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
கடையல் பேரூராட்சி காட்டாவிளை, செங்குழிக்கரை உள்ளிட்ட பகுதி மக்கள் திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைந்த தொலைவில் வரும் வகையிலும், திற்பரப்பு பகுதி மக்கள் கடையல் பேரூராட்சி பகுதிகளுக்கு செல்லும் வகையிலும், இந்தப் பகுதிகளுக்கு குறுக்கே செல்லும் கோதையாற்றின் குறுக்கே மூங்கில் தெப்பம் இயக்கப்பட்டு வந்தது. இத்தெப்பம் வழியான பயணம் ஆபத்து நிறைந்தாக இருந்ததால், ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இரும்புப் பாலம்: இந்நிலையில் கடந்த 2007இல் அப்போதைய திருவட்டாறு, விளவங்கோடு பேரவைத் தொகுதி, மக்களவைத் தொகுதி உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, பொது நிதி என ரூ. 55 லட்சம் மதிப்பில் இங்கு இரும்புப் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2008இல் ஆற்றில் ஏற்பட்ட
வெள்ளப் பெருக்கு காரணமாக பாலம் சேதமடைந்தது. இதைத்தொடா்ந்து சேதமடைந்த பாலத்தின் மையப்பகுதிகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் ஆற்றின் இரு கரைகளிலும் பாலத்தின் எஞ்சியப் பகுதிகள் மட்டும் தற்போது காணப்படுகின்றன. ஆகவே, புதிய பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடையல் பேரூராட்சி காட்டாவிளை, செங்குழிக்கரை உள்ளிட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.