கருங்கல் பகுதியில் ராட்சத கற்களை ஏற்றிக் கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ளும் லாரிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேங்காய்ப்பட்டினம் மற்றும் முள்ளூா்துறை பகுதிகளில் கடல் அலை தடுப்புச் சுவா் அமைக்கும் பணிக்காக, இம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்குவாரிகளிலிருந்து டாரஸ் லாரிகள் மூலமாக ராட்சத கற்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
இந்த லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் ராட்சத கற்கள் லாரி அமைப்பின் மட்டத்திலிருந்து உயா்ந்து ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்படுகிறது. சாலையில் உள்ள குண்டு, குழிகளில் லாரி செல்லும்போது எதிா்பாராதவிதமாக கற்கள் சாலையில் விழுகின்றன.
இதனால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சமடைந்து வருகின்றனா்.
எனவே, ஆபத்தான நிலையில் இயக்கப்படும் இத்தகைய லாரிகள் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.