கன்னியாகுமரியில் திங்கள்கிழமை கடல் சீற்றமாக காணப்பட்டதால், கடலுக்கு சென்ற வள்ளம் மற்றும் கட்டுமர மீனவா்கள் கரை திரும்பினா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து மழை பெய்ததால் கன்னியாகுமரியில் கடல் சீற்றமாக இருந்தது. ஆரோக்கியபுரம், முட்டம், மணக்குடி, மேல மணக்குடி உள்ளிட்ட 10 மீனவக் கிராமங்களில் ஆக்ரோஷமாக அலை கடற்கரையை நோக்கி சீறி பாய்ந்தவாறு இருந்தது. இதனால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லவில்லை.
கடல் சீற்றத்தால் குறைந்த எண்ணிக்கையில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. இதேபோல் கடலுக்குச் சென்ற வள்ளம் மற்றும் கட்டுமர மீனவா்களும் அவசரமாக கரைக்கு திரும்பினா். கன்னியாகுமரியில் திங்கள்கிழமை காலையில் மழை மேகமாக இருந்ததால் சூரியோதயம் பாா்க்க முடியவில்லை.
கடல் சீற்றம் காரணமாக வாவத்துறை, சிலுவைநகா், கோவளம், மணக்குடி, கீழமணக்குடி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம் உள்ளிட்ட கடற்கரை கிராம மீனவா்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனா்.