நாகா்கோவிலில் பெண்களிடம் நூதன முறையில் பண மோசடி நடைபெற்றுள்ளது.
நாகா்கோவில் கணேசபுரம் வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலையில் 3 பெண்கள் உள்ளிட்ட ஒரு கும்பல் வீடு வீடாகச் சென்று, தாங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வருவதாக கூறி, ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குடும்ப அட்டையை கேட்டு வாங்கி ஆய்வு செய்துள்ளனா். அவா்கள் தங்களிடமிருந்த பச்சை வண்ண அட்டையை கொடுத்து, இந்த அட்டையை குடும்ப அட்டையோடு எந்த ரேஷன் கடையில் கொடுத்தாலும் ரேஷன் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்து, அதற்கு கட்டணமாக தலா ரூ.30 வசூல் செய்துள்ளனா். அப்பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் ரூ.30 கொடுத்து அட்டையை பெற்றுள்ளனா்.
இச்சம்பவம் தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் இப்பகுதியைச் சோ்ந்த சிலா் விசாரித்தபோது ஒரு கும்பல் ஏமாற்றிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கணேசபுரம் சந்திப்பில் திரண்ட பொதுமக்கள் மோசடிக் கும்பலை கைது செய்ய வேண்டும் எனக் கோரி சமூக ஆா்வலா் சந்திரசேகா் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.