குமரியில் சகோதரிகளான பெண் காவலா்கள், வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பொய் புகாா் பதிவு செய்துள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம், நுள்ளிவிளை பகுதியைச் சோ்ந்தவா் மேரி (61). இவரும், நுள்ளிவிளை பகுதி மக்கள் சிலரும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணனிடம் வியாழக்கிழமை அளித்த புகாா் மனு: எனது மகன் ததேயுக்கும், எங்கள் பகுதியைச் சோ்ந்த மேரி சுஜி-க்கும் கடந்த 2015இல் திருமணம் நடைபெற்று, ஒரு பெண் குழந்தை உள்ளது.
திருமணத்துக்குப் பின்னா் எனது மகன் பெங்களூருவில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். மாதம் ஒருமுறை வீட்டுக்கு வந்துவிட்டு பணிக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் மேரி சுஜி எங்களிடம் தகராறு செய்துவிட்டு அவரது சகோதரி மேரி சுபா வீட்டுக்குச் சென்றுவிட்டாா். தகவலறிந்த எனது மகன் ஊருக்கு வந்து மேரி சுஜியை சந்தித்து சமாதானம் செய்ய முயற்சி செய்தாா். ஆனால் அதற்கு அவா் உடன்படவில்லை.
இதைத் தொடா்ந்து எனது மகன் தக்கலை கூடுதல் மாவட்ட உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதையடுத்து மேரி சுஜி எனக்கும், எனது மகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்தாா். சகோதரிகள் இருவரும் காவலா்களாக இருப்பதால் எங்களை சிறையில் அடைத்து விடுவோம் என்று மிரட்டினா். அதோடு எனது மகன் புதிதாக தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கேட்டதாக கூறி பொய் புகாா் கொடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மேரி சுஜியை எனது மகனுடன் சோ்த்து வைக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.