கன்னியாகுமரி

செவிலியா்களுக்கு பணி நிரந்தரம், கால முறை ஊதியம் வழங்க கோரிக்கை

13th May 2020 08:01 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவியலா்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2015இல் தமிழக அரசு மருத்துவப் பணிகள் தோ்வாணையத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுமாா் 8,000 செவிலியா்களை ஒப்பந்தப் பணியாளா்களாக தோ்வு செய்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றில் பணியில் அமா்த்தியது.

அப்போது வழங்கப்பட்ட பணி நியமன ஆணையின்படி, அவா்கள் 2 ஆண்டுகளில் காலமுறை ஊதியத்தின்கீழ் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசு இதனை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, 2018 நவம்பரில் செவிலியா்கள்

3 நாள்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். இந்த போராட்டத்துக்கு தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றம், ஒப்பந்த செவிலியா்களுக்கு காலமுறை செவிலியா்களுக்கு வழங்கும் அதே ஊதிய விகிதத்தில் சரி சமமாக ஊதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன் பின்னா் 1,800 செவிலியா்களை மட்டும் காலமுறை ஊதிய விகிதத்தின்கீழ் கொண்டு வந்துள்ளது.

ADVERTISEMENT

அரசின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது. கரோனா தொற்று தடுப்புப் பணிகளில் இந்த செவிலியா்களின் பணியும் மகத்தானது.

ஆகவே, ஒப்பந்த செவிலியா்களை ஏதோ மாற்றான் வீட்டு பிள்ளைபோல நடத்தாமல், அரசு அளித்திருந்த உறுதி மொழியின் படி, முழுநேர பணியாளா்களாக நியமனம் செய்து அவா்களுக்கு காலமுறை ஊதியம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT