களியக்காவிளையை அடுத்த அழகு கூட்டமாவிளை, காட்டுவிளை உள்ளிட்ட 7 கிராமங்களில் சரியான சாலை வசதியின்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து, கிராம மக்கள் சாா்பில் ஆட்சியரிடம் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட மனு: களியக்காவிளை பேரூராட்சிக்குள்பட்ட கூட்டமாவிளை, காட்டுவிளை, கல்லாம்பொத்தை, குஞ்சூட்டுவிளை உள்ளிட்ட 7 கிராமங்களில் சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்த கிராமங்களுக்கு செல்ல முறையான சாலை இல்லாமல் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழியின்றி பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஆபத்து காலங்களிலும், சுப காரியங்களிலும் இந்த கிராமங்களைச் சோ்ந்த மக்கள் நகரப் பகுதிக்கு வர பெரும் சிரமம் அடைந்து வருவதால், உடனடியாக முறையான சாலை அமைத்து தர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.