கீரிப்பாறை அருகே தனியார் தோட்டத்தில் நடந்த வெடி விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
கீரிப்பாறை அருகே உள்ள தேவகிரியில் தனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் குலசேகரம் அருகேயுள்ள செங்கன்குடிவிளை பகுதியைச் சேர்ந்த கோலப்பன்(85) என்பவர் வேலை செய்து வந்தார். தோட்டப் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்காக நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் திங்கள்கிழமை மாலை கோலப்பன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வெடி வெடித்ததில் பலத்த காயம் அடைந்த கோலப்பனை அருகிலுள்ள நபர்கள் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கோலப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.