குமரி மாவட்ட விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்ப்பு தேர்வு மே 9 ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளியில் மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு வசதியாக தங்குமிடம், உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறுவதற்கு 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை மாவட்ட அளவில் மே 9 ஆம் தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, நீச்சல், ஹாக்கி, டேக்வாண்டோ, பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஸ்குவாஷ், ஜூடோ, மேஜைப்பந்து, வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, பளு தூக்குதல், கபடி, டென்னிஸ், ஸ்குவாஷ், ஜூடோ ஆகிய விளையாட்டுகளுக்கு மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர். மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் ஆர்வம் உடைய மாணவ, மாணவிகள் அதற்கான விண்ணப்பப் படிவங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பூர்த்தி செய்து மே 7 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.