நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல்-சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரி சார்பில், "சுகாதார பாதுகாப்பு மற்றும் தேசிய முன்னேற்றம்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்நிழ்ச்சிக்கு, உலக சுகாதார நிறுவன ஆலோசகர் மருத்துவர் குகானந்தம் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் அருள்கண்ணன், துணைத் தலைவர் அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசுகையில், அறிஞர்கள் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கல்லூரி முதல்வர் லியாகத்அலி வரவேற்றார். ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர்.டேனியல், அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் அருணாசலம், மாவட்ட மன நல மருத்துவ அலுவலர் ஜோசப்ராபின், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்டெல்லா, அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சுரேஷ்பாலன் உள்ளிட்டோர் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர்கள் அய்யப்பன், சிவதாணு, துரைராஜ், மரியஜான், பகவதிபெருமாள், நன்னடத்தை அதிகாரி டால்பின்ராஜா, சாம் ஜெபா, லிட்வின் லூசியா, கார்த்திக், அலுவலக செயலர் சுஜின் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். ரோஜாவனம் கல்லூரி நிர்வாக அலுவலர் நடராஜன் நன்றி கூறினார்.