கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறையைக் கண்டித்து, தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற திமுகவினருக்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக கண்டனம் தெரிவித்தும், அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் திமுக மகளிரணி சார்பில் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தக்கலை அண்ணா சிலை அருகே மனோதங்கராஜ் எம்எல்ஏ தலைமையில், மேற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கிளாடிஸ் லில்லி உள்ளிட்ட ஏராளமான திமுக மகளிரணியினர் செவ்வாய்க்கிழமை திரண்டனர்.
அப்போது, அங்கு வந்த நாகர்கோவில் டி.எஸ்.பி. மனோஜ் தலைமையிலான போலீஸார், பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால், திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து, எம்எல்ஏ மற்றும் மகளிரணி அமைப்பாளருடன் போலீஸார் பேச்சு நடத்தியதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. பின்னர், எம்.எல்.ஏ., மகளிரணி அமைப்பாளர், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன் மற்றும் மகளிரணி நிர்வாகிகள், பத்மநாபபுரம் சார்- ஆட்சியர் சரண்யா அறியைச் சந்தித்து, பெண் வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.