குமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
குளச்சல் பகுதியில் சைமன்காலனியைச் சேர்ந்த சுபின், சன்னதித் தெரு ரமேஷ், பனவிளை மகேஷ், மேக்கோடு ஆனந்த் ஆகியோர் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இரவில் திருட்டுப் போயினவாம். இதுகுறித்த புகாரின்பேரில், குளச்சல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இரும்பிலி சந்திப்பில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 4 இளைஞர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அதில், உதயமார்த்தாண்டத்தைச் சேர்ந்த மரிய கிராஸ்வின் (20), லியோன் நகரைச் சேர்ந்த எபின் நாயகம் (21), இரும்பிலி கரையைச் சேர்ந்த முகமது அனஸ் (22) , அகஸ்தீசுவரத்தைச் சேர்ந்த கண்ணன் (20) ஆகியோர் என்பதும், குளச்சல் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்ததாம். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.
இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியது: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, மோட்டார் சைக்கிள்களை திருடி ஆலஞ்சி குன்னங்கல் பாறைக்குக் கொண்டு சென்று பழைய நம்பர் பிளேட்டுகளை கழற்றி விட்டு, போலி நம்பர் பிளேட்டுகளை பொருத்தி விற்பனை செய்துள்ளனர்.
குளச்சல் மட்டுமன்றி தக்கலை, கருங்கல், மார்த்தாண்டம், நாகர்கோவில் கோட்டாறு பகுதிகளிலும் அவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.