களியக்காவிளை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில தினங்களாக மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணிகள், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
களியக்காவிளை பேரூராட்சி வளாகம் அருகில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர், செவிலியர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு களியக்காவிளை, ஒற்றாமரம், படந்தாலுமூடு, மடிச்சல், திருத்துவபுரம், மருதங்கோடு, பூதப்பிலாவிளை மற்றும் கேரளத்தின் ஆம்பாடி, ஐங்காமம் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுவதுடன், 10-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
தற்போது கோடை மழை பெய்து வருவதால் சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மருத்துவர் பணிக்கு வராததால் செவிலியர்களே சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் கர்ப்பிணிகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இங்கு முழுநேர மருத்துவரை நியமனம் செய்து, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.