நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக தாய், மகளை தாக்கியவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
நித்திரவிளை அருகேயுள்ள செக்கிட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா (45). இவரது கணவர் விஜயகுமார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பின்னர் இவர் தனது மகன் மற்றும் தாயார் சரோஜாவுடன் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
ஜெயாவுக்கு சொந்தமாக நிலம் இல்லாததால் சாத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த அவரது பெரியப்பா மகன் ரகு தனக்குச் சொந்தமான நிலத்தை ஜெயாவுக்கு எழுதிக் கொடுத்தாராம்.
இந்த நிலத்தை ஏற்கெனவே அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் அஜி விலைக்கு கேட்டும் கொடுக்காமல், ஜெயாவுக்கு கொடுத்ததால் அஜிக்கு ரகு மற்றும் ஜெயா மீது முன்விரோதம் இருந்து வந்ததாம்.
ரகு கொடுத்த நிலத்தில் ஜெயா தற்போது வீடு கட்டி வரும் நிலையில், அங்கு சனிக்கிழமை தனது தாயாருடன் ஜெயா சென்றபோது, அங்கு வந்த அஜி அவர்களிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார்.மேலும் வீட்டுச் சுவர் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையை சேதப்படுத்தியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜெயா மற்றும் அவரது தாயார் சரோஜா ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து நித்திரவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.