மின்கம்பியாள் உதவியாளருக்கான தகுதிகாண் தேர்வு ஆகஸ்ட் மாதம் 17 , 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 2019 ஆம் ஆண்டுக்கான மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) ஆகஸ்ட் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தகுதிவாய்ந்த கம்பியாளர் உதவியாளர்களிடமிருந்தும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாளர் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்புத்திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் மின் கம்பியாளர் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
இத்தேர்வுக்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை, நாகர்கோவில் கோணம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ரூ.10 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 26 ஆம் தேதிக்குள் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.