பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி குடும்பத்துடன் தொழிலாளர்கள் தர்னாவில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
ஒப்பந்த முறையில் பணிபுரியும் பிஎஸ்என்எல் தொழிலாளர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பல மாதங்களாக பட்டினியால் வாடும் நிலை தொடர்ந்து வருகிறது. மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பி.சுயம்புலிங்கம் தலைமை வகித்தார்
இதில், மாவட்டச் செயலர் ஏ.செல்வம், சிஐடியூ மாவட்டச் செயலர் கே.தங்கமோகன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பி.ராஜூ, மாவட்டத் தலைவர் கே.ஜார்ஜ், மாவட்டப் பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.