கன்னியாகுமரியை அடுத்த சுக்குப்பாறை தேரிவிளையில் காமராஜரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவுக்கு, அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்னம்பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் (ஓபிசி பிரிவு) செயலர் எஸ்.குணசேகரன் முன்னிலை வகித்தார். விவேகானந்த கேந்திர செயலர் என்.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற நேதாஜி நகர் அணிக்கு ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசு பெற்ற கன்னியாகுமரி அணிக்கு ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசு பெற்ற சின்னமுட்டம் அணிக்கு ரூ. 4 ஆயிரம், நான்காம் பரிசு பெற்ற சுக்குப்பாறை தேரிவிளை அணிக்கு ரூ. 2 ஆயிரம் பரிசு மற்றும் கோப்பைகளை ஹெச்.வசந்தகுமார் எம்.பி. வழங்கினார். தொடர்ந்து அன்னதானத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏக்கள் என்.சுரேஷ்ராஜன், எஸ்.ஆஸ்டின், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலர் என்.தாமரைபாரதி, மாநில காங்கிரஸ் (ஓபிசி பிரிவு) செயலர் வி.ஸ்ரீநிவாசன், மகளிர் காங்கிரஸ் மாநிலச் செயலர் தங்கம் நடேசன், அகஸ்தீசுவரம் வடக்கு வட்டாரத் தலைவர் காலபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் என்.சிதம்பரநாதன் நன்றி கூறினார்.