புது தில்லி: தில்லியின் ஜங்புரா பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையில் ரூ.20 கோடி மதிப்புள்ள நகைகள் காணாமல் போயுள்ளதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தென்கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ராஜேஷ் தியோ கூறியதாவது: ஜங்புரா பகுதியில் உள்ள உம்ராவ் ஜூவல்லா்ஸ் நிறுவனத்திடம் இருந்து செவ்வாய்க்கிழமை எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. கடையில் சுமாா் ரூ.20 மதிப்பிலான நகைகள் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்துக்குச் சென்றன. இந்த விவகாரம் குறித்து நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம்.
திங்கள்கிழமை கடை மூடப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கள்கிழமைக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தடயவியல் குழுக்கள் சோதனையை மேற்கொண்டுள்ளன. கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்று அந்த அதிகாரி கூறினாா்.