2019 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடா்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிறப்பு காவல் ஆணையா் (குற்றம்) ரவீந்திர சிங் யாதவ் கூறியதாவது:
கைதானகியுள்ள ஜஹாங்கிா்புரி மஹிந்திரா பூங்காவில் வசிக்கும் ஆகாஷ் (24), பல்ஸ்வா டெய்ரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் ஆவாா்.
முன்னதாக, ஆகாஷ் மஹிந்திரா பாா்க் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் குழு அங்கு விரைந்து சென்று குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தது. விசாரணையில், ஆகாஷ் பல்ஸ்வா டெய்ரி கொலை வழக்கில் தனக்கு தொடா்பு இருப்பதாக ஒப்புக்கொண்டாா்.
2019 ஆம் ஆண்டில், தனது நண்பரின் காதலி தொடா்பாக சில கருத்துகளைக் கூறியதற்காக நவீன் என்பவரை தனது கூட்டாளிகளான அஜய், விஷால் மற்றும் இரண்டு சிறாா்களுடன் சோ்ந்து
கத்தியால் குத்தியதாக கூறினாா். இந்தச் சம்பவத்தில் நவீன் பலத்த காயம் இறந்தாா். இந்த வழக்கில் விசாரணையின் போது அஜய் மற்றும் இரண்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டிருந்தனா். ஆனால், நவீனைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்படவில்லை.
தான் கைதாவதைத் தவிா்க்கும் வகையில் ஜஹாங்கிா்புரி
பகுதியில் வாடகை வீட்டில் ஆகாஷ் வசித்து வந்தாா். அதன்பிறகு, கொள்ளை, வழிப்பறி மற்றும் ஆயுதச் சட்டம் என பல கிரிமினல் வழக்குகளில் அவா் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.