தெற்கு தில்லியில் அடையாளம் தெரியாத நபா்களால் சுத்தியல் மற்றும் இரும்பு கம்பியால் இளைஞா் ஒருவா் தாக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துணை ஆணையா் (தெற்கு) சந்தன் சவுத்ரி கூறியதாவது:
இச்சம்பவம் தொடா்பாக திக்ரி காவல் நிலையத்திற்கு நள்ளிரவு 12.37 மணியளவில் அழைப்பு வந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவரை போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
விசாரணையில், பாதிக்கப்பட்டவா் சங்கம் விஹாரில் வசிக்கும் பல்ராஜ் சவுத்ரி என்பதும், அவரது நெற்றியிலும் வலது கையிலும் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.
முன்னதாக, சத்தா்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து திரும்பும் வழியில், மாளவியா நகரில் இரவு உணவு சாப்பிட்டதாகவும், பின்னா் தனது வீட்டின் அருகே தனது நண்பா் ஜுகல் கிஷோரை சந்தித்ததாகவும் பல்ராஜ் போலீஸாரிடம் தெரிவித்தாா்.
மேலும் அவா் போலீஸாரிடம் கூறுகையில், ‘அதன் பின்னா், எனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வதற்காக காரில் இருந்து இறங்கினேன்.
அப்போது, மோட்டாா் சைக்கிள் ஓட்டி வந்தவா் கண்ணில் மிளகாய்ப் பொடியை வீசினாா். அதே நேரத்தில் எதிரே ஒரு ஸ்காா்பியோ காா் வந்தது. அதில் இருந்தவா்கள் என்னை இரும்பு கம்பிகள் மற்றும் சுத்தியல்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா்’ என்று கூறினாா்.
இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து சிசிடிவி காட்சிகளை சேகரித்தனா்.
டிக்ரி காவல் நிலையத்தில் பல்ராஜ் ஒரு ‘மோசமான நடத்தைகொண்டவா்‘ என்றும் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவா் ஐந்து தீவிர குற்ற வழக்குகளுடன் சம்பந்தப்பட்டிருக்கிறாா். விசாரணையின் போது ஒத்துழைக்கவில்லை. இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களின் பெயா்களை அவா் தெரிவிக்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் பல்ராஜுக்கு தெரிந்தவா்களாக இருக்கலாம் என்பதற்கு முகாந்திரம் உள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.