உலகின் அனைத்துக் கம்பன் கழகங்களையும் ஒருங்கிணைத்து, தில்லியில் அகில உலகக் கம்பன் கழக மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருவதாக தில்லிக் கம்பன் கழக நிறுவனா் கே.வி.கே. பெருமாள் தெரிவித்தாா்.
தில்லியில் அண்மையில் கம்பன் கழகத்தை நிறுவிய கே.வி.கே. பெருமாளுக்கு இலங்கையில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கொழும்பு வெள்ளவெத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை கம்பன் கழக அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியா் வாசுதேவா வரவேற்றாா். கொழும்பு கம்பன் கழகத் தலைவரும், ஓய்வுபெற்ற இலங்கை நீதிபதியுமான ஜெ.விஸ்வநாதன், அகில இலங்கை கம்பன் கழக நிறுவனா் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தில்லிக் கம்பன் கழக நிறுவனா் கே.வி.கே. பெருமாள் ஏற்புரையாற்றி பேசியதாவது:
தில்லியில் கம்பன் கழகம் உருவாக ஊக்கம் அளித்த இலங்கை ஜெயராஜுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். தமிழும், அறமும் நிலைக்க வேண்டுமானால் கம்பனையும், வள்ளுவனையும் உலகம் முழுவதும் கொண்டாட வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் கடமை.
உலக அளவில் இருக்கிற அனைத்துக் கம்பன் கழகங்களையும் ஒருங்கிணைத்து, அகில உலகக் கம்பன் கழகங்களின் மாநாட்டை தில்லியில் நடத்தத் தில்லிக் கம்பன் கழகம் திட்டமிட்டு வருகிறது. அதற்கு அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஒத்துழைப்புத் தேவை‘ என்றாா்.