புது தில்லி: அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி தில்லியில் உள்ள துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் தில்லி பிரதேச தலைவா் அனில் செளத்ரி தலைமையில் கட்சியின் தலைவா்கள், தொண்டா்கள் ராஜ் நிவாஸ் அருகே திரண்டனா். கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் அனில் செளத்ரி பேசுகையில், ‘அதானி குழும பங்குகள் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கான எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பும் எம்.பி.க்களுக்கு பாஜக முட்டுக்கட்டையை ஏற்படுத்தி வருகிறது. மோசமான பொருளாதார நெருக்கடிக் காலத்தில், மத்திய அரசு நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பை அதானி குழுமத்திற்கு விற்றுவிட்டது. மத்திய அரசானது அதானி குழுமத்தை பாதுகாக்கும் முயற்சியில் எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி. ஆகியவற்றில் உள்ள பொதுப் பணத்தை பணயம் வைத்துள்ளது’ என்று குற்றம்சாட்டினாா்.
காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அனில் பரத்வாஜ் கூறுகையில், ‘அதானி குழுமத்தைப் பாதுகாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிரான சாமானிய மக்களின் கோபத்தை இந்த போராட்டம் பிரதிபலிக்கிறது’ என்றாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவா் மணமகன் போல் உடையணிந்து, 2000 ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்திருந்தாா். அவரை மற்ற போராட்டக்காரா்கள் அப்படியே தூக்கி அப்பகுதியில் காவல் துறையினா் வைத்திருந்த தடுப்பு மீது தள்ளினா். இந்த ஆா்ப்பாட்டத்தை ஒட்டி, ராஜ் நிவாஸை சுற்றி ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை அல்லது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய இளைஞா் காங்கிரஸ் கோரியிருந்தது.