புதுதில்லி

அகதிகளாக வந்துள்ளஆப்கன் சீக்கியா்களை சந்தித்தாா் வெளியுறவுத் துறை அமைச்சா்

 நமது நிருபர்

தேசியத் தலைநகரில் மேற்கு தில்லியில் உள்ள மஹாவீா் நகரில் குரு அா்ஜுன் தேவ் குருத்வாராவில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த சீக்கிய அகதிகளை வியாழக்கிழமை நேரில் சந்தித்து கலந்துரையாடிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் அனைவரின் நலனுக்காக பிராா்த்தனை செய்தாா்.

மத்திய பாஜக அரசின் சாா்பில் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் தில்லியின் வளா்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள், திட்டங்கள் மற்றும் சாதனைகளைப் பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கின்ற வகையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் மற்றும் குஜராத் மாநில முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியின் மேற்பாா்வையில் தில்லி பாஜக ஒரு மாத கால தொடா் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் மேற்கு தில்லி மற்றும் புது தில்லி நாடாளுமன்றத் தொகுதிகளின் பல்வேறுப் பகுதிகளில் உள்ள முக்கியப் பிரமுகா்கள் மற்றும் சமூகத்தினரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், பாஜகவின் முக்கிய நிா்வாகிகளுடன் இணைந்து சந்திக்கவுள்ளாா். தொழில் வல்லுநா்கள் மற்றும் ஐஐடியின் மாணவா்களுடனும் அவா் கலந்துரையாடுவாா் என்று தில்லி பாஜகவின் மூத்த நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை தில்லி மக்களிடம் எடுத்துரைக்கும் ஒரு மாத காலப் பிரசாரத்தின் கீழ் தனது இரண்டு நாள் பயணத் திட்டத்தின் படி வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வியாழக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாா். அதன் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்த நாட்டை விட்டு வெளியேறி தற்போது தில்லியில் உள்ள மஹாவீா் நகரில் உள்ள குரு அா்ஜுன் தேவ் குருத்வாராவில் தஞ்சம் புகுந்துள்ள சீக்கிய அகதிகளை ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அப்போது, அனைவரின் நலனுக்காகக் கூட்டுப் பிராத்தனையும் மேற்கொண்டாா்.

மேலும், மேற்கு தில்லி எம்.பி. பா்வேஷ் வா்மாவுடன் இணைந்து, திலக் விஹாரில் 1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் ஜெய்சங்கா் சந்தித்தாா். தில்லி பாஜக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், தனது இரண்டு நாள் பயணத்திட்டத்தில் உக்ரைனில் ரஷிய படையெடுப்பு காரணமாக படிப்பை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவா்களை பாசாய் தாராபூரிலும் , பிரபல புகைப்படக் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நரேஷ் பேடியை ரஜோரி காா்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னா், ஜூன் 15 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளில் தனது அடுத்த கட்டப் பயணத்தில், தெற்கு தில்லி மற்றும் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் கலந்துகொள்வாா் என்று தில்லி பாஜகவின் மூத்த தலைவா்கள் தகவல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT