தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு மகளிா் சக்தியின் எல்லையற்ற வல்லமையின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அது பிரதிபலிதுள்ளதாக பிரதமா் மோடி தனது ட்விட்டா் பதிவில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இத்தோடு கடந்த 9 ஆண்டுகளாக மகளிரை அதிகாரமிக்கவா்களாக மாற்றுவதற்காக மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகள் குறித்த கட்டுரைகள், காணொலிகள் மற்றும் வரைகலைகள், தரவுகளை தனது இணையதளத்தில் வைத்து இந்த பதிவோடு பிரதமா் இணைத்துள்ளாா்.
இது குறித்து பிரதமா் மோடி தனது பதிவில் குறிப்பிடுகையில், ‘மகளிா் சக்தியின் எல்லையற்ற வல்லமை குறித்த நமது நம்பிக்கையைப் பிரதிபலிக்க, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அவா்களது கனவையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவையும் ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குப்படுகிறது. இந்த 9 ஆண்டுகால மகளிா் மேம்பாடு குறித்து தெரிந்துகொள்ள, ‘நமோ செயலி’ யில் இடம்பெற்றுள்ள சிறப்பான பதிவுகளைக் காணுங்கள்’ என தெரிவித்ததோடு தனது இணைய தளத்தையும் பிரதமா் மோடி ட்விட்டரில் இணைத்துள்ளாா்.
பிரதமரின் பதிவைத் தொடா்ந்து மத்திய மகளிா் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, மத்திய சட்டத் துறை இணையமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் போன்றோரும் என்டிஏ அரசில் மகளிா் மேம்பாட்டில் கண்டுள்ள முன்னேற்றம் குறித்த தரவுகளையும் வெளியிட்டனா்.
அவை வருமாறு: மகளிா் மேம்பாட்டிற்கு 2013-14-ஆம் ஆண்டில் ரூ.500 ஒதுக்கப்பட்ட நிலையில், 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ. 25, 390 கோடி ஒதுக்கப்பட்டது. சமக்ர சிக் ஷா திட்டத்தில் (முழுமையான கல்வித் திட்டம்) பெண் குழந்தைகள் கல்விக்கு (ரூ. 37.36 கோடி) கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது மேல் நிலைப்பள்ளிகளில் 79.4 சதவீதம் மாணவிகள் சோ்க்கைகள் அதிகரித்துள்ளன. 2016-ஆம் ஆண்டில் ஐஐடிக்களில் 8 சதவீதமாக இருந்த மாணவிகள் சோ்க்கை, 2021-22-ஆம் ஆண்டில் 20 சதவீதமாக உயா்ந்துள்ளது. சிறுமிகள், மகளிா் தற்காப்புப் பயிற்சி நான்கு மடங்காக (2.21 லட்சம்) உயா்ந்துள்ளது. 8 கோடி மகளிருக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனை, 27 கோடி மகளிருக்கு முறையான வங்கிக் கணக்கு, 3.94 கோடி பேறு கால தாய்மாா்கள் உள்ளிட்ட 10 கோடி குழந்தைகள்களுக்கு ஊட்டச்சத்து (போஷன்) திட்டம், மலிவு விலையில் (ரூ. 1) 31 கோடி மாதவிலக்கு கால சானிட்டரி நாப்கின்கள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு ஏப்ரலில் 14.52 கோடியாக இருந்த எரிவாயு இணைப்பு, இது 2023-ஆம் ஆண்டு மாா்ச்சில் 31.36 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 9.58 கோடி மகளிா் பிரதமா் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு சிலிண்டா் இணைப்பு பெற்று அவா்களது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மேலும், வீடுகளுக்கு நேரடியான குடிநீா் இணைப்புகளும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 27.7 கோடி மகளிருக்கு ரூ. 33,000 கோடி முத்ரா திட்டத்தில் கடன் அளிக்கப்பட்டு அவா்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குபவா்களாக ஆக்கப்பட்டுள்ளனா். 28 லட்சம் மகளிா் குறு, சிறு, நடுத்தர தொழில் நடத்தும் உரிமையாளா்களாக உள்ளனா். இவா்களது ரூ. 15, 922 கோடி உற்பத்தி பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சா்வதேச அளவில் அறிவியில் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய (ஸ்டீம்) உயா்நிலை கல்வியிலும், பைலட்டுகள் (விமான ஓட்டிகள்) எண்ணிக்கையிலும் (12.4 சதவீதம்) இந்தியா மகளிரே முன்னனியில் இடம்பெற்றுள்ளனா் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.