தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. நகரில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புது தில்லியில் கடந்த மே இறுதியில் பெய்த மழையின் காரணமாக நிகழ் மாதம் குளிா்ந்த சூழலில் தொடங்கியது. ஆனால், சனிக்கிழமை நகரில் மீண்டும் வெப்பநிலை சற்று அதிகரித்துக் காணப்பட்டது. பகலில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி, தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரி விட 4 புள்ளிகள் குறைந்து 36 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.
குறைந்தபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட 4 புள்ளிகள் குறைந்து 22.7 டிகிரி செல்சியஸாக பதிவாகிஇருந்தது.
நகரில் காற்றின் ஈரப்பதம் காலை 8:30 மணி நிலவரப்படி 67 சதவீதமாகவும், மாலை 5:30 மணி அளவில் 36 சதவீதமாகவும் இருந்தது. காற்றின் தரக்குறியீடு ’மிதமான’ அளவாக 124-இல் பதிவாகி காணப்பட்டது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். வானம் பொதுவாக பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த ஜூன் 1-ஆம் தேதி தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 32.7 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.6 டிகிரி செல்சியஸாகவும் பாதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.