தேசியத் தலைநகா் தில்லியில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த மழை கொட்டிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை மிதமான வெயில் இருந்தது. மேகமூட்ட சூழலும் காணப்பட்டது. எனினும், புழுக்கம் நீடித்தது.
தில்லியில் சில தினங்களாக மழை ஏதும் இல்லாமல் இருந்த நிலையில், சனிக்கிழமை நகரில் பகலில் மேகமூட்ட சூழல் காணப்பட்டது. மாலையில் பரவலாக மழை கொட்டியது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலில் மிதமான வெயிலுடன் மேகமூட்ட சூழல் இருந்தது. இதனால், புழுக்கமும் அதிகரித்திருந்தது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 2 டிகிரி குறைந்து 25.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றம் ஏதுமின்றி 35.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 92 சதவீதமாகவும், மாலை 8 மணியளவில் 69 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
பூசாவில் 30 மி.மீ. மழைப் பதிவு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 13.2 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் 0.5 மி.மீ., முங்கேஸ்பூரில் 1.5 மி.மீ., நஜாஃப்கரில் 0.5 மி.மீ., ஆயாநகரில் 1 மி.மீ., லோதி ரோடில் 17.2 மி.மீ., பாலத்தில் 18.7 மி.மீ., ரிட்ஜில் 1.4 மி.மீ., பீதம்புராவில் 3.5 மி.மீ., பூசாவில் 30 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, நேரு நகா், ராமகிருஷ்ணா புரம், மதுரா சாலை, ஷாதிப்பூா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘திங்கள்கிழமை (ஜூலை 17) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.