தேசியத் தலைநகா் தில்லியில் பகலில் இதமான வெயிலும், இரவில் குளிரின் தாக்கமும் நீடிக்கிறது. சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 1 டிகிரி அதிகரித்த போதிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி குறைந்திருந்தது.
காற்றின் தரம் காலை 9 மணியளவில் 224 காற்றுத் தரக் குறியீடாக பதிவாகி மோசம் பிரிவில் காணப்பட்டது. சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கும் சென்றது.
தில்லியில் சில தினங்களாக பகலில் இதமான வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. எனினும், நள்ளிரவிலும், அதிகாலையிலும் குளிரின் தாக்கம் நீடிக்கிறது. சனிக்கிழமை தலைநகரில் காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10 மணிக்கு மேல் இதமான வெயில் காணப்பட்டது. இது மாலை வரை நீடித்தது.
தில்லியின் வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி குறைந்து 6.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி அதிகரித்து 23.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 89 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான முங்கேஸ்பூரில்
குறைந்தபட்ச வெப்பநிலை 4.1 டிகிரி, நஜஃப்கரில் 6.1 டிகிரி, ஆயாநகரில் 5.8 டிகிரி, லோதி ரோடில் 4.8 டிகிரி, பாலத்தில் 6.4
டிகிரி, ரிட்ஜில் 4.6 டிகிரி, பீதம்புராவில் 10 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தலைநகரில் சனிக்கிழமை காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. காலை 9 மணியளவில் தலைநகரில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 244 புள்ளிகளாகவும், மாலையில் 236 புள்ளிகளாகவும் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) தலைநகரில் லேசான மழையுடன் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3--ஆம் தேதிவரை தெளிவான வானம் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.