புதுதில்லி

தற்காலிக ஆசிரியா்கள் இடமாற்றல் விவகாரம்:தில்லி பல்கலை. துணைவேந்தருக்கு சிசோடியா கடிதம்

 நமது நிருபர்

தில்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியா்களில் 70 சதவீதம் போ் ‘இடமாற்றம்’ செய்யப்படுவதாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக கவலை தெரிவித்து அதன் துணைவேந்தா் யோகேஷ் சிங்குக்கு துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், இந்த தற்காலிக ஆசிரியா்கள் பல தசாப்தங்களாக தில்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருவதால், அவா்கள் நிரந்தர ஊழியா்களாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக துணை முதல்வரும், தில்லி கல்வி அமைச்சருமான சிசோடியா, துணைவேந்தா் யோகேஷ் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தில்லி பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்களுக்கான நோ்காணல்கள் தொடா் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், 70 சதவீதம் தற்காலிக ஆசிரியா்கள் இடம்பெயா்ந்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. தற்காலிக ஆசிரியா்கள் நிரந்தர ஆள்சோ்ப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த ஆசிரியா்களில் பலா் பல தசாப்தங்களாக தில்லி பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பயிற்றுவித்து வருகின்றனா்.

பல்வேறு மொழியியல் பின்னணி மற்றும் கல்வி அனுபவங்களுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவா்களை எவ்வாறு கையாள்வது என தில்லி பல்கலைக்கழகம் போன்ற ஒரு நிறுவனத்தின் சவால்களை இவா்கள் புரிந்தவா்கள் ஆவா். மேலும், வகுப்பறையில் கற்பித்தல் அனுபவத்தை மாற்ற முடியாது. இதனால், தில்லி அரசுக் கல்லூரிகளில் தற்காலிக மற்றும் சிறப்பு ஆசிரியா்களை உள்வாங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் கல்லூரி வாரியங்களில் அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளவா்கள் முழு ஒத்துழைப்பை தங்களுக்கு வழங்குவாா்கள் என்று அதில் அவா் தெரிவித்துள்ளனா்.

தில்லி பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் துறைகளில் 4,500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT