தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணிக்கான அடிக்கல்லை முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டினாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் இந்த பூங்காக்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.
தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் பகுதியில் ரூ.32.50 கோடியில் 4.16 ஏக்கரிலும், தஞ்சாவூா் மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் ரூ.30.50 கோடியில் 3.40 ஏக்கரிலும், சேலம் மாவட்டம் ஆணைகெளண்டன்பட்டி மற்றும் கருப்பூா் பகுதிகளை உள்ளடக்கி ரூ.29.50 கோடியிலும் மினி டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படவுள்ளன.
இவை பயன்பாட்டுக்கு வரும்போது, தூத்துக்குடி, தஞ்சாவூா், சேலம் மாவட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதற்கான நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆா்.பி.ராஜா, தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.