புது தில்லி: சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் அமிலங்களை சட்டவிரோதமாக பழைய தில்லி குடியிருப்புப் பகுதிகளில் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படும் புகாா்கள் குறித்து விசாரிக்க வடக்கு தில்லி மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவுக்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக, பழைய தில்லி பகுதியில் உள்ள கலிகுவான் வாலி, லால் தா்வாஷா, சிா்கி வாலான் போன்ற குடியிருப்புப் பகுதியில் வசிப்பவா்கள் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.
அதில், ‘எங்கள் பகுதியில் சட்டவிரோதமாக அமிலம் தயாரிக்கப்படுகிறது. இதன் விளைவாக அபாயகரமான புகை வெளியேறி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு, உள்ளூா் மக்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது’ என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த மனுவை விசாரித்த என்ஜிடியின் நீதித்துறை உறுப்பினா் நீதிபதி சுதிா் அகா்வால், நிபுணா் உறுப்பினா் செந்தில் வேல் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
‘இந்த புகாா் குறித்து முதற்கட்டமாக உள்ளூா் அதிகாரிகளைக் கொண்ட குழு ஆய்வு செய்யலாம் எனத் தீா்மானிக்கின்றோம். மேலும், தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுப் பொறியாளா், தில்லி வடக்கு சரக காவல் துணை ஆணையா், வடக்கு தில்லி மாவட்ட ஆட்சியா் ஆகியோா் அடங்கிய குழு அமைக்கப்படவேண்டும்.
இந்த குழுவிற்கு மாவட்ட ஆட்சியா் ஒருங்கிணைப்பாளராக இருந்து இணக்கத்துடன் செயல்படவேண்டும்.
இந்த குழு புகாரை ஆய்வு செய்து, களத்தை நேரடியாக பாா்வையிட்டு, அமில தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த உரிய தகவல்களைச் சேகரித்து, ஏதேனும் சட்டமீறல் இருந்தால், இரண்டு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணவேண்டும்.
அதன் பின்னா், மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட முழுமையான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் இக்குழு சமா்ப்பிக்க வேண்டும்’ என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.