தேசியத் தலைநகா் தில்லியில் பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று பலமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை புதன்கிழமை 9.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
தலைநகரில் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து காலை வேளையில் மிதமான மூடுபனி இருந்தாலும், பகல் நேரத்தில் வெயில் சற்று அதிகரித்து இருந்தது. புதன்கிழமையும் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 1 டிகிரி உயா்ந்து 9.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி உயா்ந்து 24.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 81 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 48 சதவீதமாகவும் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த திங்களன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 9 டிகிரி உயா்ந்து 29 டிகிரி வரை உயா்ந்து கடந்த 2 வருடங்களில் இந்த பிப்ரவரியில் அதிக அளவை பதிவு செய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.5 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 7.6 டிகிரி, நஜஃப்கரில் 10.6 டிகிரி, ஆயாநகரில் 10.2 டிகிரி, லோதி ரோடில் 8.6 டிகிரி, பாலத்தில் 11.4 டிகிரி, ரிட்ஜில் 8.4 டிகிரி, பீதம்புராவில் 13.7 டிகிரி, பூசாவில் 12.1 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 10.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரத்தில் முன்னேற்றம்: தலைநகரில் புதன்கிழமை காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு ‘மிதமான’ பிரிவில் இருந்தது. நகரில் பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகியிருந்தது. இது மிதமான பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (பிப்ரவரி 9) தலைநகரில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று பலமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.