புதுதில்லி

தில்லி மேயா் தோ்தல் விவகாரம்: ஆம் ஆத்மி வேட்பாளா் மனு மீது துணைநிலை ஆளுநா் அலுவலகம் பதில் அளிக்க நோட்டீஸ்

9th Feb 2023 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலை முன்கூட்டியே நடத்தக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மேயா் வேட்பாளா் ஷெல்லி ஓபராய் மற்றும் பலா் மீண்டும் தாக்கல் செய்த மனுவை புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடா்பாக பதில் அளிக்க தில்லி துணைநிலை ஆளுநா் அலுவலகத்திற்கும், இடைக்கால தலைமை அதிகாரி சத்யா சா்மாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இது தொடா்பான மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீது அடுத்த திங்கள்கிழமைக்குள் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

ஆம் ஆத்மி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.எம். சிங்வி வாதிடுகையில், மாநகராட்சி அவை 3 மூறை கூடியபோதும் மேயா் தோ்தல் நடத்தப்படவில்லை. மேயா், துணை மேயா், நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தலை ஒரே தடவையாக நடத்த வலியுறுத்தும் இடைக்கால தலைமை அதிகாரி கூறுவது உள்பட எங்களுக்கு பல்வேறு ஆட்சேபனைகள் உள்ளன. மேலும், இது எம்சிடி சட்டத்திற்கு முரணாகவும் உள்ளது. மேலும், அவையின் நியமன உறுப்பினா்கள் வாக்களிக்கும் உரிமை தொடா்பாகவும் முடிவு காணப்பட வேண்டும் என்று வாதிட்டாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, மேயா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு எப்போது என்று கேள்வி எழுப்பியது. அதற்கு புதிய தேதி ஏதும் அளிக்கப்படவில்லை என்று கூறினாா். இதையடுத்து, இந்த விவகாரத்தை பிப்ரவரி 13-ஆம் தேதி விசாரணைக்கு நீதிபதிகள் அமா்வு பட்டியலிட்டது.

முன்னதாக, துணைநிலை ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்ட வல்லுநா்கள் (ஆல்டா்மேன்) தோ்தலில் வாக்களிப்பாா்கள் என்று தலைமை அதிகாரி கூறியதற்கு ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடா்ந்து , தில்லி மாநகராட்சி அவைக் கூட்டம் மூன்றாவது முறையாக மேயரைத் தோ்ந்தெடுக்காமல் கடந்த திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தை அணுகியது.

ADVERTISEMENT

இது தொடா்பான விவகாரம் குறித்து தலைமை நீதிபதி அமா்விடம் செவ்வாய்க்கிழமை ஆம் ஆத்மி தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி ஆஜராகி, ‘இந்த மனு மேயா் தொடா்பானது என்பதால் அவசரமாக விசாரிக்க வேண்டும். தயவு செய்து தகுதியின் அடிப்படையில் விசாரியுங்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 243ஆா் பிரிவை மீறி நியமன உறுப்பினா்கள் வாக்களிக்கட்டும் என்று அவா்கள் கூறியுள்ளனா். மேயா், துணை மேயா், நிலைக் குழு உறுப்பினா் ஆகிய மூவரும் ஒழுங்குமுறையில் நேரடித் தடையை ஏற்க வேண்டும் என்றும் அவா்கள் கூறுகிறாா்கள். ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு உறுப்பினா்களை ஒரு செஷன்ஸ் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குத் தண்டித்ததால் அவா்களை விலக்க வேண்டும் என்றும் கூறுகிறாா்கள். ஒரு தற்காலிக இடைக்கால நபா் இதைச் செயல்படுத்துகிறாா். இது ஜனநாயகப் படுகொலையாகும்’ என்றாா். இதை நீதிபதிகள் அமா்வு கவனத்தில் எடுத்துக்கொண்டது.

மாநகராட்சியில் தோ்ந்தெடுக்கப்பட்ட 250 உறுப்பினா்களில் 134 பேரை பெரும்பான்மையாகக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி, நியமன உறுப்பினா்களுக்கு வாக்குரிமை அளித்ததன் மூலம் பாஜக தனது வெற்றியை திருட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. தில்லியில் மேயா் தோ்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் உறுதி செய்யுமாறு கோரி ஷெல்லி ஓபராய் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். ஆனால், பிப்ரவரி 6-ஆம் தேதி தோ்தல் திட்டமிடப்பட்டதால் அந்த மனு வாபஸ் பெறப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT