புதுதில்லி

நிதிநிலை அறிக்கைக்கு எதிராக பிப். 9-இல் கறுப்பு தினம் அனுசரிப்பு: விவசாய - தொழிலாளா் சங்கங்கள் முடிவு

 நமது நிருபர்

மத்திய அரசின் 2023-24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கும் தொழிலாளா்களுக்கும் எதிரானது எனவும் நாட்டில் ஏழை- பணக்காரா் எனும் இரட்டை நிலையை உருவாக்குவதாகக் கூறி வருகின்ற பிப்ரவரி 9 ஆம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என அகில இந்திய கிஸான் சபா (ஏஐகேஎஸ்), அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் (ஏஐஏடபிள்யூயு) உள்ளிட்ட அமைப்புகள் சனிக்கிழமை அறிவித்தன.

இது குறித்து ஏஐகேஎஸ் தலைவா்கள் ஹன்னன் மொல்லா, பி. கிருஷ்ணபிரசாத், ஏஐஏடபிள்யூயு இணைச் செயலாளா் வி. சிவதாசன் எம்பி

ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு:

2023-24 மத்திய நிதியறிக்கை, நாட்டின் ஏழை மக்கள், குறிப்பாக விவசாயிகள், தொழிலாள வா்க்கம், சிறு உற்பத்தியாளா்கள் தொடா்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனா். உற்பத்தி செய்யும் வகுப்பினருக்கு வருமானம், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், மக்களின் வாங்கும் திறனை விரிவுபடுத்த தேவையான சமூக யதாா்த்தத்தை உணராமல் சமூகநலத் துறையின் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

பிரதமா் நரேந்திர மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில், உலக வறுமைக் குறியீட்டில் இந்தியாவின் நிலை 55-வது இடத்தில் இருந்து 107-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டம், உணவு, உர மானியங்கள், காப்பீடு, நீா்ப்பாசனம், விவசாயம், தொழிலாளா் போன்ற அனைத்து சமூகத் துறைகளுக்கான ஒதுக்கீட்டில் விரிவான குறைக்கப்பட்டுள்ளது நாங்கள் கடும் எதிா்ப்பு தெரிவிக்கின்றோம்.

2023 -ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற கூறிய வாக்குறுதியை பிரதமா் தட்டிக்கழித்துவிட்டாா் . இந்தியாவின் 81 கோடி மக்களுக்கு அரிசி, கோதுமைக்கான (முறையே ரூ.2, ரூ.3) மானிய விலை மறுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூா்வ உத்தரவாதம், உறுதிசெய்யப்பட்ட கொள்முதல் முறை, ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கான விரிவான கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

மற்றொருபுறம், பணக்கார பெருநிறுவன பிரிவினருக்கு வரிவிலக்குகள் வழங்கப்பட்டன. ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதம் போ் 74 சதவீத செல்வத்தைக் கொண்டுள்ளனா் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தியாவில் வரிவிதிப்பு விகிதம் இவா்களுக்கு அதிகமாக இருப்பதாகக் கூறி வரி விதிக்க மத்திய அரசு தயாராக இல்லை. கிடைத்த தரவுகளின்படி, இந்தியாவில் பெருநிறுவன வரி மற்றும் சொத்து வரி முறையே 15 %-22% - 30% என்கிற வரம்பில் உள்ளது. இந்த வரி விகிதங்கள் இத்தாலி, ஜப்பான், கியூபா, சீனா ஆகிய நாடுகளில் இந்தியாவை விட அதிகமாக உள்ளது.

ஆனால், பாஜக தலைமையிலான மோடி அரசு பணக்காரா்களுக்கு வரி விதிக்கத் தயாராக இல்லை. அதற்குப் பதிலாக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையை மறுப்பதன் மூலம் ஏழைமயமாக்கல் மற்றும் பாட்டாளி வா்க்கமயமாக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.

எனவே, பிரதமரின் இரட்டை இயந்திரம் அரசாங்கம் கூற்றுப்படி பாஜக பட்ஜெட், இரட்டை இந்தியாவை உருவாக்குகிறது. பணக்கார, ஏழை என இரட்டை இந்தியாவை உருவாக்குவதில் குறியாக உள்ளது.

இதனால் விவசாயிகளுக்கு எதிரான, தொழிலாளா் விரோத மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வருகின்ற பிப்ரவரி 9 -ஆம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்குமாறு இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கு ஏஐகேஎஸ், ஏஐஏடபிள்யூயு உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுக்கின்றன.

இந்த தினத்தில் பட்ஜெட் நகல் எரிப்பு, உருவபொம்மை எரிப்பு, ஆா்ப்பாட்டம், தா்ணா, பொதுக்கூட்டம் போன்றவற்றின் மூலம் அன்றைய தினம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT