தில்லி கலால் ஊழல் தொடா்பாக ஐந்து நபா்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபா்களான விஜய் நாயா், பி. சரத் சந்திர ரெட்டி, பினாய் பாபு, அபிஷேக் போயின் பல்லி, அமித் அரோரா ஆகியோா் பிப்ரவரி 23-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்ப சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டாா். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஏழு நிறுவனங்களின் பிரதிநிதிகளை அடுத்த விசாரணை நாளில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவா் உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக அவா் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த கூடுதல் புகாரின் மூலம் குற்றம்சாட்டப்பட்ட 12 பேருக்கும் எதிரான வழக்கை மேலும் தொடர போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்கள் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது’ என தெரிவித்தாா். துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அதன் சிறப்பு அரசு வழக்குரைஞா் என்.கே. மட்டா மூலம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.