மத்திய ஆயுத காவல் படைகளின் (சிஏபிஎஃப்) காவலா்கள் தோ்வை நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள இந்தி, ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த ஒப்புதல் அளிக்கும் மத்திய அரசின் அறிவிப்பு அம்மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசின் உறுதிப்பாட்டை காட்டுகிறது என மத்திய செய்தி ஒலிபரப்பு, மீன் வளத்துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
மத்திய ஆயுத காவல் படைகளின் (சிஏபிஎஃப்) காவலா்கள்(பொதுப் பணி) தோ்வை நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள இந்தி, ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பை முன்னிட்டு மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தனது டிவிட்டா் பதிவில் கூறியிருப்பது வருமாறு:
மத்திய ஆயுதப் படைகளின் காவலா் தோ்வை 13 மொழிகளில் எழுதலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த அறிவிப்பு பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்களுக்கான அரசின் உறுதிப்பாட்டை காட்டுகிறது என அதில் அமைச்சா் எல்.முருகன் பதிவிட்டுள்ளாா்.