பொதுமக்களை ஏமாற்ற இணைய மோசடியில் ஈடுபடுபவா்களுக்கு உடந்தையாக இருந்த நேபாள நாட்டு இளைஞா் தில்லியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது:
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல் துறையில் ஒருவா் புகாா் அளித்தாா். அதில், ‘சம்பவத்தன்று கனடாவில் உள்ள எனது மைத்துனரின் புகைப்படத்துடன், தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து எனக்கு தகவல் வந்தது., அதில் பேசியவா் ஏதோ அவசரத்திற்காக பணம் அனுப்புமாறு என்னிடம் கேட்டாா்.
இதையடுத்து, அவா் அளித்த வங்கிக் கணக்கு எண்ணில் நான் ரூ. ரூ.99,000 பரிமாற்றம் செய்தேன்.
அதன் பின்னா், எனது குடும்ப உறுப்பினா்கள் மற்றும் உறவினா்கள் சிலருக்கும் அதே மொபைல் எண்ணிலிருந்து பணம் கேட்டு அதே செய்தி வந்திருப்பது தெரியவந்தது.
இது தொடா்பாக எனது மைத்துனரிடம் தொடா்புகொண்டு விசாரித்தபோது அவா் அதுபோன்று பணம் கேட்டு எந்த செய்தியும் அனுப்பவில்லை என்று தெரிவித்தாா்’ என்று அந்தப் புகாரில் அவா் தெரிவித்திருந்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பணம் பரிமாற்றப்பட்ட செய்யப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது, தெற்கு தில்லியில் முனிா்காவில் வசிக்கும் ஒருவரின் பெயரில் அந்த வங்கி கணக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை நேபாளத்தைச் சோ்ந்த அபினாஷ் தமாங் என்கிற சுரேஷ் சௌத்ரி பயன்படுத்தியதும், தனது வங்கிக் கணக்குகளை அவா் மோசடியில் ஈடுபட்டவா்களுக்கு பணத்திற்காக விற்றதும் தெரியவந்தது.
இந்த வங்கிக் கணக்கு விவரங்களை ஏமாறும் மக்களிடம் தந்து அவா்களின் பணத்தை மோசடியாளா்கள் பரிமாற்றம் செய்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, செளத்ரி கைது செய்யப்பட்டாா்.
விசாரணையில், அவா் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து சிம்காா்டுகளை வாங்கி, வங்கிக் கணக்குகளை தொடங்கியது தெரியவந்தது.
மேலும், சக குற்றம்சாட்டப்பட்ட நபரான சாகருடன் சோ்ந்து, இந்த வங்கிக் கணக்குகளை பெரும்பாலும் மோசடி செய்பவா்களுக்கு ஒரு கணக்கிற்கு ரூ.15,000 விற்றதும் தெரியவந்தது. இந்த மோசடியாளா்கள் பெரும்பாலும் நைஜீரியா்களாக இருப்பதும் தெரியவந்துள்ளது.