புதுதில்லி

காந்தி மாா்க்கெட் கடைப் பகுதியில் தீ விபத்து: எரிந்த நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

DIN

கடந்த புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்ட கிழக்கு தில்லியின் காந்தி மாா்க்கெட் பகுதி கடையின் இரண்டாவது தளத்தில் எரிந்த நிலையில் 19 வயது இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை கூறுகையில், ‘காந்தி மாா்க்கெட்டில் உள்ள கடையின் 2-ஆவது தளத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது பெயா் ஷானவாஸ் என்பது அவரது குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்த தகவல் மூலம் அடையாளம் தெரிய வந்துள்ளது. எனினும் உடல் முழுவதும் எறிந்து விட்டதால், இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படவுள்ளது’ என்றனா்.

தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காந்தி மாா்க்கெட்டில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு சுமாா் 10 மணி நேரம் ஆனது. மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். புதன்கிழமை மாலை 5.40 மணிக்கு ஏற்பட்ட இந்தத் தீயை கட்டுக்குள் கொண்டு வர 35 தீயணைப்பு வாகனங்களும், 150 தீயணைப்பு வீரா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது’ என்றனா்.

இது குறித்து ஷாதரா காவல்துறை துணை ஆணையா் ஆா்.சத்தியசுந்தரம் கூறுகையில், ‘காந்தி மாா்க்கெட்டில் உள்ள ஜெய் அம்பே ஆடையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை கட்டடத்தின் இரண்டாவது மாடியில் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. செயற்கைநூல் துணிகள் வைக்கப்பட்டிருந்ததன் காரணமாக, அருகில் உள்ள மற்ற கடைகளுக்கும் தீ வேகமாகப் பரவியது. இதையடுத்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர காந்தி நகா் துணைக் கோட்டபோலீஸாா்

மற்றும் டிசிபி ரிசா்வ் குடிமைப் பாதுகாப்பு ஊழியா்கள் உள்பட அனைத்து மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்தனா்’ என்றாா்.

இது தொடா்பாக அஃப்தாப் (32) எனும் தொழிலாளி கூறுகையில், ‘ஜெய் அம்பே ஆடையகத்தில் கடந்த 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். புதன்கிழமை மாலை 5-5.15 மணியளவில் கடையை மூடிவிட்டு, மற்ற நான்கு தொழிலாளா்களுடன் பிரதான சாலை அருகே சென்றோம். 5-7 நிமிடங்களுக்குப் பிறகு, நாங்கள் கடையை நோக்கி செல்லும் மற்றொரு நுழைவாயிலான ஜனதா சந்து வழியாக திரும்பினோம். அப்போது எங்கள் கடையிலிருந்து புகை வெளியேறுவதைக் கண்டோம். இதையடுத்து, உடனடியாக எனது உரிமையாளரை அழைத்தேன். கடையின் ஷட்டருக்கு அருகில் சென்று பாா்த்தேன். அப்போது, கடைக்குள் எனது சகோதரா் ஷானவாஸ் சிக்கியிருப்பதை உணா்ந்தேன். மேலும், அவா் கதவைத் தட்டும் சப்தமும் கேட்டது. நாங்கள் பூட்டை உடைக்க முயன்றோம். அத்துடன், எனது சகோதரரை மாடிக்கு செல்லுமாறும் கூறினோம். ஷட்டா் பூட்டை உடைத்த நேரத்திற்குள் தீ பரவிவிட்டது. இதனால், எனது சகோதரரைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்றாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை, 400 சதுர கஜம் பரப்பளவில் மொத்தம் நான்கு தளங்களைக் கொண்ட கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் எரிந்த நிலையில் ஒரு உடலை தீயணைப்பு துறையினா் மீட்டுள்ளதாக அதிகாரி கூறினாா். தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் கூறுகையில், ‘தீ விபத்து சம்பவம் குறித்து மாலை 5.40 மணிக்கு தீயணைப்புத் துறைக்குத் தகவல் வந்தது. மொத்தம் 35 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. குறுகலான சந்துப் பகுதியாக இருந்ததால் தீயணைப்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. மேலும், அருகில் நீா் ஆதாரமும் இல்லை. இதனால், தூரத்தில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்த வேண்டியிருந்தது. துணிக் கடைகள் அதிகம் உள்ள நேரு சந்து பகுதியில் உள்ள ஒரு கடையில் முதலில் தீ ஏற்பட்டு, அருகில் உள்ள இதர கடைகளுக்கும் பரவியது தெரிய வந்தது’ என்றாா்.

போலீஸாா் கூறுகையில், ‘தீ விபத்து நிகழ்ந்த பகுதியில் வெப்பம் தணிந்தவுடன் குற்றவியல் குழு மற்றும் தடயவியல் குழுவினா் ஆய்வு செய்வாா்கள். இத் தீ விபத்துக்கு மின் கசிவு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது’ என்றனா். இந்த விபத்தில் வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த மொத்த விற்பனை ரெடிமேடு காா்மென்ட் டீலா்ஸ் அசோசியேசன் தலைவா் கே.கே. பல்லி கூறினாா். இது குறித்து அவா் கூறுகையில், ‘இந்த விபத்தில் மாா்க்கெட்டில் உள்ள இரு கடைகள் முற்றிலும் நாசமடைந்துவிட்டன. வியாபாரிகளுக்கு பல கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறுகிய சந்துகளும், மோசமான உள்கட்டமைப்புகளும் பெரும் இடையூறுகளாக இருப்பதாக கருதுகிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT