தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் கலந்து கொண்டாா்.
ராம்லீலா கமிட்டியின் ‘ராவண் தஹன்’ நிகழ்ச்சியில் கேஜரிவால் பங்கேற்றுப் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், இந்தியா உலகின் சிறந்த மற்றும் வலிமையான தேசமாக மாற வேண்டும் என்று வாழ்த்தினாா். ராம்லீலா மக்களுக்கு மிகவும் முக்கியமானது. மக்களை நாட்டின் கலாசாரத்துடன் இணைத்து, கடவுள் ராமரின் வாழ்க்கைச் செய்தியைப் பரப்புகிறது ராமலீலா என்றும் குறிப்பிட்டாா்.
ராம்லீலா என்பது தீமையின் மீது நடந்த நன்மையின் வெற்றியாகும். இதையொட்டித்தான் இந்து இதிகாசமான ராமாயணம் இயற்றப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி, அசுர மன்னன் ராவணன், அவரது சகோதரா் கும்பகா்ணன் மற்றும் மகன் மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டதையும் முதல்வா் நேரில் பாா்த்தாா். இந்த நிகழ்ச்சியில் ‘பாகுபலி’ புகழ் நடிகா் பிரபாஸும் கலந்து கொண்டாா். செங்கோட்டை பகுதியில் பல்வேறு ராம்லீலா கமிட்டிகளால் ‘ராவண் தஹன்’ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.