தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், குடியிருப்பாளா்கள் நலச் சங்கங்களுக்கு (ஆா்டபிள்யுஏ) அதிகாரமும், மினி கவுன்சிலா்கள் அந்தஸ்தும் வழங்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
உள்ளாட்சித் தோ்தலுக்கு சில நாள்களுக்கு முன்னதாக செய்தியாளா்கள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான கேஜரிவால் பேசுகையில் கூறியதாவது: மக்களை தில்லியின் உரிமையாளா்களாக மாற்றுவது (’ஜந்தா கோ டில்லி கா மாலிக் பனானா ஹை’) என்பது இந்தப் பாா்வையின் பின்னணியில் உள்ளது. தில்லி மாநகராட்சித் தோ்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி எம்சிடியில் ஆட்சிக்கு வந்தால், நாங்கள் உண்மையில் ஆா்டபிள்யுஏக்களுக்கு அதிகாரம் அளிக்கப் போகிறோம். அவா்களுக்கு அரசியல் மற்றும் நிதி அதிகாரங்களை வழங்குவோம். தில்லியில் உள்ள ஆா்டபிள்யுஏக்களுக்கு ‘மினி கவுன்சிலா்கள்‘ அந்தஸ்து வழங்கப்படும்.
தில்லி மாநகராட்சியில் 250 வாா்டுகளில் டிசம்பா் 4-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது, ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தோ்தலில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. வாக்குகள் டிசம்பா் 7-ஆம் தேதி எண்ணப்படும்.