காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான ‘உடனடி’ நடவடிக்கைகளை எடுக்குமாறு தில்லி பல்கலைக்கழகம் தனது ஆளுமையின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக திங்களன்று கல்லூரி முதல்வா்களுக்கு தில்லி பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு ஏற்ப அனைத்து அனுமதிக்கப்பட்ட பணியிடங்களும் நிரப்பப்படுவதை கல்லூரிகள் உறுதி செய்ய வேண்டும். கல்லூரிகள், ‘உங்கள் கல்லூரி / நிறுவனத்தில் பல்வேறு பாடங்களில்/துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களை, அனுமதிக்கப்பட்ட வலிமைக்கு எதிராக உடனடியாக நிரப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகத்தின் ஆணைகளின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள முறையான நடைமுறைகளைப் பின்பற்றி, அனைத்து தகுதி அளவுகோல்கள் மற்றும் தகுதிகளை கருத்தில் கொண்டு பணியிடங்களை நிரப்புமாறு பல்கலைக்கழகம் கோரியுள்ளது. மேலும், இணக்க அறிக்கையை உடனடியாக அனுப்புமாறும் பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
‘அனுமதிக்கப்பட்ட அனைத்து பணியிடங்களும் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடஒதுக்கீட்டுப் பட்டியலின்படி, வகுப்பு அளவு, பயிற்சிகள், நடைமுறைகள் போன்றவற்றில் மாறுபாடுகள் எதுவாக இருந்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் ஆசிரியா் பதவியின் அடிப்படையில் நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’ என்று பல்கலைக்கழகம் கடிதத்தில் கூறியுள்ளது.