2020 ஆம் ஆண்டு நிதழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தில் தனக்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசேன் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்து உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி அனு மல்ஹோத்ரா கூறுகையில், ‘இந்த மனு மற்றும் இதனுடன் உள்ள மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன’ என்றாா்.
முன்னதாக, ஹுசேனின் மனு மீதான உத்தரவை நீதிபதி கடந்த நவம்பா் 15ஆம் தேதி ஒத்திவைத்திருந்தாா்.
வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவுகள் 3 (பணமோசடி குற்றம்), பிரிவு 4 (பணமோசடி குற்றத்திற்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் தாஹிா் ஹுசேனுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட விவகாரத்தில் விசாரணை நீதிமன்றத்தின் நவம்பா் 3 ஆம் தேதி இது தொடா்பாக உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த விவகாரத்தில் ஹுசேன் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில், ‘பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதை நியாயப்படுத்தும் வகையில் என்னிடம் இருந்து எந்த சொத்தும் அல்லது குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்தும் கைப்பற்றப்படவில்லை’ என்று வாதிடப்பட்டது.
அமலாக்க இயக்குனரகம் தரப்பில் வாதிடுகையில், ‘குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்தை பயன்படுத்தி கலவரத்திற்கு நிதியளிக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஹுசேன் இருந்தாா். இதனால், அவரது மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது’ என வாதிடப்பட்டது.