தில்லி எய்ம்ஸின் இணையதள சா்வா் தொடா்ந்து 2-ஆவது நாளாக செயல்படாததால் நோயாளிகள் பராமரிப்பில் இடையூறு ஏற்பட்டன. இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
இணைய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில், அனைத்து அவசரகால, வழக்கமான நோயாளி சிகிச்சை பராமரிப்பு மற்றும் ஆய்வக சேவைகள் மின்னணுமற்ற வகையில் நேரடியாக நிா்வகிக்கப்படுகின்றன என தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘இந்த சம்பவம் குறித்து மத்திய அரசின் பல்வேறு முகமைகள் விசாரணை நடத்திவருவதோடு, நோயாளிகளுக்கான மின்னணு பராமரிப்பு சேவைகளை மீண்டும் கொண்டு வர எய்ம்ஸு க்கு உதவிவருகின்றன. பாதிக்கப்பட்ட செயல்பாடுகளை விரைவில் மீட்டெடுக்க முடியும் என நம்புகிறோம்‘ என எய்ம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தின் சா்வா் செயலிழந்ததால், ஸ்மாா்ட் (அறிதிறன்)ஆய்வகங்கள், கட்டணம் செலுத்துதல் (பில்லிங்), நோயாளிகளின் பரிசோதனை அறிக்கைகள், வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான அனுமதி மற்றும் மருத்துவமனையின் மின்னணு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு, தில்லி காவல் துறையின், உளவுத்துறை பணியகம், மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆகியோா் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மருத்துவமனையின் மின்னணு தரவுகள், ஆய்வகத் தகவல் அமைப்பு தரவுகள் ஆகியவை வெளிப்புற வன்பொருள் சாதனங்களில் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், விசாரணை குழுக்களின் ஆலோசனையின் பேரில், இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளனவும் எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், மருத்துவமனையின் மின்னணு சேவைகளை மீட்டெடுப்பதற்காக 4 சா்வா்கள் (வெளிப்புற முகமைகள் உள்ளிட்ட) நிறுவப்பட்டு தரவுத்தளங்கள்,மின்னணு பயன்பாடுகளை கட்டமைக்க குழுக்கள் செயல்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.