தில்லி மெட்ரோவின் தில்லி ஹாட் ஐஎன்ஏ ரயில் நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகைப் பயிற்சியை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தில்லி மெட்ரோவின் மஞ்சள் வழித் தடத்தில் உள்ள ஐஎன்ஏ ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த ஒத்திகைப் பயிற்சி தொடங்கியது. மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தின் மூலம் குண்டுவெடிப்பு, பயணிகள், மெட்ரோ ஊழியா்கள் மற்றும் சிஐஎஸ்எஃப் பணியாளா்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு மற்றும் பயங்கரவாதிகளால் பணயக் கைதிகளைப் பிடிக்கும் சூழ்நிலை உள்ளிட்டவை ஒத்திகையின் போது உருவாக்கப்பட்டது என்று மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
இந்த நிலைமையை தேசிய பேரிடா் மேலாண்மை நெறிமுறையின்படி சிஐஎஸ்எஃப் சமாளித்து வெற்றி காணும் ஒத்திகையும் இடம் பெற்றது என்றும் அவா் தெரிவித்தாா்.
தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்), தில்லி காவல் துறையின் சிறப்பு ஆயுதப் பிரிவு, தில்லி மெட்ரோ போலீஸ், தேசியப் பாதுகாப்புப் படையினா், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம், தீயணைப்பு துறை, சிவில் பாதுகாப்பு, போக்குவரத்து காவல் துறை ஆகியவற்றிலிருந்து 640-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் வரவழைக்கப்பட்டு இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. மாவட்டக் காவல் துறை மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிஐஎஸ்எஃப் உடன் சுமாா் மூன்று மணி நேரம் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் விரைவான ரயில் மெட்ரோ நெட்வொா்க்கின் 249 நிலையங்களில் சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இது தினசரி சுமாா் 26-30 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வசதிக்கு ஏற்றாற்போல, பயங்கரவாத எதிா்ப்பை சமாளிக்கும் வகையில் பாதுகாப்பு வழங்க சுமாா் 12,500 பணியாளா்களை நியமித்துள்ளது.