தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த துணைச் செயலா் மற்றும் இரண்டு உதவிக் கோட்ட ஆட்சியா்கள் ஆகியோரை தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்துள்ளதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
முதல்வா் கேஜரிவால்அலுவலகத்தில் துணைச் செயலராக நியமிக்கப்பட்ட பிரகாஷ் சந்திர தாக்கூா், வசந்த் விஹாா் உதவிக் கோட்ட ஆட்சியா் ஹா்ஷித் ஜெயின் மற்றும் விவேக் விஹாா் உதவி கோட்ட ஆட்சியா் தேவேந்தா் சா்மா ஆகியோா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இந்த நடவடிக்கையானது, ஊழலை சகித்துக் கொள்ளாத துணைநிலை ஆளுநா் சக்சேனாவின் உறுதியை பிரதிபலிப்பதாகவும், அரசின் செயல்பாடுகளில் தரத்தை உறுதிப்படுத்துவதாகவும் அந்த வட்டாரங்களில் கூறப்பட்டது.
முன்னதாக, கால்காஜி விரிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதில் குளறுபடிகளைக் கண்டறிந்த நிலையில், தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) இரண்டு உதவிப் பொறியாளா்களை துணைநிலை ஆளுநா் கடந்த திங்கள்கிழமை பணியிடைநீக்கம் செய்திருந்தாா்.