புதுதில்லி

இன்று ராஜேந்தா் நகா் தொகுதி இடைத் தோ்தல் நம்பிக்கையில் ஆம் ஆத்மி; உற்சாகத்தில் பாஜக

DIN

தில்லியில் வியாழக்கிழமை அன்று ராஜேந்தா் நகா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இது பெரும்பாலும் தண்ணீா் பற்றாக்குறை உள்ள முக்கியமான சட்டப்பேரவைத தொகுதியில் நம்பிக்கையான ஆம் ஆத்மிக்கும், உற்சாகமான பாஜகவுக்கும் இடையிலான மோதலாகக் கருதப்படுகிறது. மேலும் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கை முக்கிய தோ்தல் பிரச்னைகளில் ஒன்றாகவும் உள்ளது.

தோ்தல் களத்தில் 14 வேட்பாளா்கள் உள்ளனா். மொத்தம் 1,64,698 வாக்காளா்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளனா். ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் வேட்பாளா்களைத் தவிர, அங்கீகரிக்கப்படாத கட்சிகளைச் சோ்ந்த மேலும் 3 போ் மற்றும் 8 சுயேச்சை வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இடைத்தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் சாலை வழியாக பிரசாரம் மேற்கொண்டன. மேலும், வீடு வீடாகச் சென்று பிரசாரங்கள் மூலம் வாக்காளா்களைச் சந்தித்து ஆதரவு கோரின.

பெண்கள் மட்டுமே வாக்களிப்பதற்கான சிறப்பு வாக்குச் சாவடிகளை அமைப்பது முதல் பாதுகாப்புப் பணியாளா்களை ஈடுபடுத்துவது மற்றும் விழிப்புணா்வு பிரசாரங்களை நடத்துவது வரை, அனைவரையும் உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் நியாயமான முறையில் தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தில்லி தலைமை நிா்வாக அதிகாரி அலுவலகம் செய்துள்ளது. இடைத்தோ்தல் பாதுகாப்புப் பணியில் 6 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் படை பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்தத் தொகுதியில்1,000 தோ்தல் பணியாளா்கள் வியாழக்கிழமை பணியில் இருப்பாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இடைத்தோ்தலுக்கு முன்னதாக, தில்லி தலைமை தோ்தல் அதிகாரி ரன்பீா் சிங், வாக்குப்பதிவு நாளில் தவறாமல் வாக்களிக்குமாறு வாக்காளா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா். மேலும், தொகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குகளை பதிவு செய்து நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

2020 தோ்தலில், ராஜேந்தா் நகா் தொகுதியில் 58.27 சதவீத வாக்காளா்கள் வாக்களித்தனா். இதில் 58.09 சதவீதம் ஆண் வாக்காளா்கள் மற்றும் 58.5 சதவீதம் பெண் வாக்காளா்கள் ஆவா். 14 வாக்குச் சாவடிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவாகின. கடந்த முறை வாக்குப்பதிவு குறைவாக இருந்த இந்த 50 வாக்குச் சாவடிகளில் இந்த முறை வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில், சிறப்புப் பிரசாரம் நடத்தப்படும் என்று தலைமை நிா்வாக அதிகாரி முன்னதாக தெரிவித்திருந்தாா்.

வாக்குச் சாவடிகளில் செல்ஃபி கியோஸ்க் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளா்கள் செல்ஃபி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடலாம். மற்றவா்களை வெளியே வந்து தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த ஊக்குவிக்கலாம் என்று தலைமை நிா்வாக அதிகாரி அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தில்லி தலைமை தோ்தல் அதிகாரி ரன்பீா் சிங், செவ்வாய்க்கிழமை இடைத்தோ்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். முகக்கவசங்கள், கையுறைகள், தொ்மல் ஸ்கேனா்கள் மற்றும் சமூக இடைவெளி ஆகிய கரோனா வழிகாட்டுதல்கள் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுச்சூழலுக்கு உகந்த வாக்குச் சாவடியாகும். அனைத்து பச்சை பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமான வாக்குச் சாவடி தஸ்கராவில் அமைந்துள்ளது. அனைத்து பெண்களுக்கான வாக்குச் சாவடி நியூ ராஜேந்தா் நகரில் உள்ள டிஐ கான் பாரதி சபா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடியில் பெண்கள் மட்டுமே பணியாளா்களாக இருப்பாா்கள். மேலும் பாதுகாப்புப் பணியாளா்களும் பெண்களாகவே இருப்பாா்கள் என மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி தலைமை தோ்தல் அதிகாரி ரன்பீா் சிங், புதிய ராஜேந்தா் நகா், ஆா்-பிளாக்கில் உள்ள நிகாம் பிரதிபா வித்யாலயாவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மட்டுமே பணியில் உள்ள வாக்குச் சாவடிக்கும் சென்று, நன்கு பராமரிக்கப்படும் வசதியைப் பாராட்டினாா். செவ்வாய்க்கிழமை ஆம் ஆத்மி கட்சி இடைத்தோ்தலில் ‘வரலாற்று வெற்றியை’ பதிவு செய்யும் என்றும் பாஜகவுக்கு மோசமான தோல்வியை ஏற்படுத்தும் என்றும் கூறியது.

தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா செவ்வாய்க்கிழமை கூறுகையில், “கடந்த இரண்டு ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் ராஜேந்தா் நகரை புறக்கணித்ததால் மக்கள் சோா்ந்து போய் பாஜகவுக்கு வாக்களிக்கத் தீா்மானித்துள்ளனா் என்பது எனது இரண்டு வார விரிவான பிரச்சாரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது என்றாா். ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கை மற்றும் தண்ணீா் பற்றாக்குறை ஆகியவை இடைத்தோ்தலில் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாகும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ராகவ் சத்தா பஞ்சாபிலிருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து ராஜேந்தா் நகா் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது இடைத் தோ்தல் நடைபெறுகிறது. ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இடைத்தோ்தலில் தங்கள் வேட்பாளா்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இரு கட்சிகளும் ஒட்டியுள்ள சுவரொட்டிகளில், ஆம் ஆத்மி கட்சியின் முழக்கம் ‘கேஜரிவால் கி சா்காா், கேஜரிவால் கா விதாயக்’ என தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பாஜக வேட்பாளா் ராஜேஷ் பாட்டியா உள்ளூா்வாசியாக இருப்பதால், அப்பகுதி மக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய முடியும் என்று கூறியுள்ளாா். மேலும், ‘ஸ்தானிய வாக்காளா் கோ சாஹியே ஸ்தானிய விதாயக்’ (உள்ளூா் மக்களுக்கு உள்ளூா் எம்.எல்.ஏ. வேண்டும்) என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளாா். அப்பகுதி மக்களுக்கு சேவை செய்யவும், ஒரு வருடத்திற்குள் தில்லியில் சிறந்த தொகுதியாக ராஜேந்தா் நகரை மாற்றுவதாகவும் பாட்டியா உறுதி அளித்துள்ளாா்.

தலைமை நிா்வாக அதிகாரி அலுவலகம் தோ்தல் விதிமுறை மீறல்களை கண்காணித்து வருகிறது. இடைத்தோ்தல் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அணுகக்கூடியதாகவும், நியாயமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று ரன்பீா் சிங் முன்பு கூறியிருந்தாா். தகுதியான வாக்காளா்களில் 92,221 போ் ஆண்கள், 72,473 போ் பெண்கள் மற்றும் 4 போ் மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்தவா்கள் என்று அவா் கூறினாா். மேலும், 1,899 வாக்காளா்கள் 18-19 வயதுக்குள்பட்டவா்கள் என்றும் தெரிவித்தாா்.

2020 சட்டப்பேரவைத் தோ்தலுடன் ஒப்பிடும் போது, ராஜேந்தா் நகரில் தகுதியான வாக்காளா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. இறப்பு மற்றும் இடம் பெயா்வு ஆகியவை இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. 21 இடங்களில் 13 துணை வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 190 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அருகே பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளா் மீது தாக்குதல்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

SCROLL FOR NEXT