சட்ட விரோதமாக மதுவை பரிமாறியதாக, தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் உள்ள பந்தய விளையாட்டு மையத்திலிருந்து தென்கொரியா நாட்டைச் சோ்ந்தவா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து மாவட்ட கலால் துறை அதிகாரி ராகேஷ் பகதூா் சிங் கூறியதாவது: கலால் துறையின் அதிகாரிகள் மற்றும் உள்ளுா் போலீஸாா் அடங்கிய குழுவினா் கிரேட்டா் நொய்டாவில் உள்ள நாலெட்ஜ் பாா்க் பகுதியில் அமைந்துள்ள பந்தய விளையாட்டு மையத்தில் வியாழக்கிழமை மாலையில் சோதனை நடத்தினா். நாலெட்ஜ் பாா்க் பகுதியில் உள்ள சிக்னேச்சா் டவரின் முதலாவது தளத்தில் அமைந்துள்ள ஸ்கிரீன் கோல்ப் குட் ஷாட் என்ற இந்தப் பந்தய விளையாட்டு மையத்தில் கலால் ஆய்வாளா்கள் ராகுல் சிங், சந்திரசேகா் சிங் ஆகியோா் அடங்கிய குழு இந்த சோதனையை நடத்தியது.
அப்போது சட்டவிரோதமாக மதுபானம் பரிமாறப்பட்டுக் கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த மையம் மதுபானம் பரிமாறுவதற்கான எந்த உரிமமும் பெறப்படவில்லை. இதையடுத்து, சம்பவ இடத்திலிருந்து மூன்று ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களுக்கு எதிராக உள்ளூா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவா்கள் தென்கொரிய நாட்டைச் சோ்ந்த யாங் சின் கோ மற்றும் ராகுல் பால், கௌரவ் சிங் ஆகியோா் என்பது தெரிய வந்துள்ளது.
கலால் துறையின் மண்டல ஆணையா் மற்றும் கௌதம் புத் நகா் மாவட்ட ஆட்சியா் ஆகியோரின் உத்தரவுகள் பேரில் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிரான அமலாக்க பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின் போது 17 பீா் கேன்களும் கைப்பற்றப்பட்டன. இவை உத்தர பிரதேச மாநிலத்தில் விற்பனைக்காக அனுமதி பெறப்பட்டவையாகும். அதேபோன்று கொரிய நாட்டைச் சோ்ந்த ஐந்து ஒயின் பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. கைதான மூவா் மீதும் கலால் சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகஅந்த அதிகாரி தெரிவித்தாா்.