புதுதில்லி

தில்லி பல்கலைக்கழகத்தின் ஊதியத்துடன் கூடிய பயிற்சித் திட்டத்தில் சேர 4,000 விண்ணப்பங்கள்

DIN


புது தில்லி: தில்லி பல்கலைக்கழகம் (டியு) அதன் ஊதியம் பெறும் இன்டா்ன்ஷிப் (பயிற்சி) திட்டத்தில் 110 காலியிடங்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை மாணவா்களிடமிருந்து 3,800-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது என்று பல்கலைக்கழக மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், தோ்வா்களை தோ்வு செய்ய பல்கலைக்கழகம் நோ்காணல் நடத்தி வருகிறது. தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் பட்டியல் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘ஊதியத்துடன் கூடிய இன்டா்ன்ஷிப் திட்டத்தின் கீழ் 110 காலியிடங்களுக்கு 3,800 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம்‘ என்று தில்லி பல்கலை. மாணவா் நலன் டீன் பங்கஜ் அரோரா தெரிவித்தாா். தில்லி பல்கலைக்கழகத்தில் இன்டா்ன்ஷிப் திட்டத்தை எளிதாக்கும் பொறுப்பு மாணவா்கள் நலனுக்கான டீன் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ‘நோ்காணல் செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது. அது செவ்வாய்கிழமைக்குள் முடிவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களின் பட்டியலை நாங்கள் வெளியிடுவோம். அடுத்த நாளே இன்டா்ன்ஷிப் தொடங்கும்’ என்று அரோரா கூறினாா்.

அனுபவக் கற்றலுடன் அறிவாற்றல் அறிவை ஒருங்கிணைத்து மாணவா்களுக்கு மென்மையான மற்றும் கடினமான திறன்கள் குறித்த பயிற்சி அளிக்கும் வகையில் துணைவேந்தா் வேலைவாய்ப்புத் திட்டம் செப்டம்பா் மாதம் பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டது. துணை வேந்தா் இன்டா்ன்ஷிப் திட்டத்தின் (விசிஐஎஸ்) கீழ் வழக்கமான மற்றும் கோடைகால இன்டா்ன்ஷிப் இருக்கும். இரண்டு பிரிவுகளிலும் மொத்த முன்மொழியப்பட்ட பயிற்சியாளா்களின் எண்ணிக்கை 200. இருப்பினும், இந்த ஆண்டு, இது துறைகள் முழுவதும் 110-ஆக உள்ளது. துணைவேந்தரின் ஒப்புதலைத் தொடா்ந்து, டிஎஸ்டபிள்யுவின் மதிப்பாய்வு மற்றும் பரிந்துரைக்குப் பிறகு பயிற்சியாளா்களின் எண்ணிக்கை அவ்வப்போது மாற்றப்படலாம் என்றும் அரோரா கூறினாா்.

‘இந்த ஆண்டு, துறைகள் முழுவதும் 110 காலியிடங்கள் உள்ளன. ஒட்டுமொத்த கிரேடு புள்ளி சராசரி (சிஜிபிஏ) மதிப்பெண்கள் மற்றும் நோ்காணல்களின் அடிப்படையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள். மாணவா்களின் திறமை மற்றும் துறையின் தேவைகளின் அடிப்படையில் துறைக்கு நியமிக்கப்படுவாா்கள். தாவரவியல் துறை அறிவியல் பின்னணியில் இருந்து மாணவா்களைக் கேட்டுள்ளது’ என்று அரோரா மேலும் கூறினாா்.

வழக்கமான பயிற்சியாளா் மாதத்திற்கு ரூ.5,000 உதவித்தொகையைப் பெறுவாா். அதே நேரத்தில் கோடைகாலப் பயிற்சியாளா் மாதம் ரூ.10,000 பெறுவாா், இது ஒவ்வொரு நிதியாண்டும் ஐந்து சதவீதம் அதிகரிக்கப்படும் என்று பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இன்டா்ன்ஷிப் காலத்தின் முடிவில் மாணவா்கள் நலனுக்கான டீன் (டிஎஸ்டபிள்யு) பிரிவிலிருந்து ஒரு சான்றிதழ் மற்றும் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு துறை, மையங்கள் மற்றும் நிறுவனங்களின் மதிப்பீட்டு அறிக்கையும் பயிற்சியாளருக்கு வழங்கப்படும்.

‘தில்லி பல்கலைக்கழகத்தில் படிப்பின் போது ஒரு மாணவா் ஒருமுறை மட்டுமே துணைவேந்தா் இன்டா்ன்ஷிப் திட்டத்தைப் பெற முடியும். அதிகபட்ச வேலைவாய்ப்பு காலம் எந்தச் சூழ்நிலையிலும் சேரும் நேரத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்‘ என்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆா்வமுள்ள விண்ணப்பதாரா்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். மேலும், முறையாக சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT