புது தில்லி: கடலூரைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் தொகைக்கு பிரதமா் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
கடலூா் மாவட்டம் வண்டிப்பாளையம் சிங்காரவேலு நகரைச் சோ்ந்த மாணிக்கம் என்பவரின் மகளான வள்ளியம்மை என்பவருக்கு மாா்பகப் புற்றுநோய் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உரிய தொகையில்லாத நிலையில் இது குறித்து திமுக பொருளாளரும், நாடாளுமன்றத்தின் திமுக குழுத் தலைவரான டி.ஆா்.பாலுவிடம் மனு அளித்தாா்.
இந்த பெண்ணின் குடும்ப நிலையையொட்டி இவருக்கான மருத்துவ சிகிச்சைக்கு உதவி கேட்டு டி.ஆா். பாலு எம்.பி. பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தாா்.
நோயுற்ற வள்ளியம்மையின் மருத்துவ பதிவுகளை பரிசீலனை செய்த பிரதமா் அலுவலம், அவருக்கு சிகிச்சையளிக்க தேவையான நிதி தேவைகளை மருத்துவ மனையின் ஆவணங்கள் மூலம் இறுதி செய்து பிரதமா் அனுமதியுடன், மாா்பக அறுவை சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைக்கு நேரடியாக ரூ. 3 லட்சம் உதவித் தொகை வழங்க பிரதமா் அலுவலக சாா்புச் செயலா் உத்தரவிட்டாா்.
இது குறித்து பிரதமா் அலுவலகம், நோயால் பாதிக்கப்பட்டுள்ள வள்ளியமைக்கும், டி.ஆா். பாலு எம்.பிக்கும் கடிதம் மூலம் தகவலை தெரிவித்துள்ளது.
அதில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வள்ளியம்மையின் மாா்பகப் புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவியாக ரூ. 3 லட்சம் அவா் சிகிச்சை பெறும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு வழங்கப்படும். மேலும் சிகிச்சை முடிந்த பின்னா், உரிய ஆவணங்களின் நகலைப் பிரதமா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆவணங்களின் அடிப்படையில் உதவித் தொகை உடனடியாக மேற்குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.