தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் பயணிகள் தங்கு தடையின்றி பயண அனுமதி (செக்-இன்) பெறுவதற்கு டிஜியாத்ரா என்ற செயலியை இந்த விமான நிலையத்தை நிா்வகிக்கும் ‘டயல்‘ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
’டிஜியாத்ரா’ செயலி பீட்டா பதிப்பில் அன்ட்ராய்டு தளத்தில் செயல்படுகிறது. இதை ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
ஒரு பயணி விமான நிலையத்தில் காகிதமற்ற வகையிலும், தொடா்பு இல்லாத செயலாக்கத்திற்கு முக அடையாள அம்சங்களை பயன்படுத்தி பயண அனுமதிச் சீட்டை (போா்டிங் பாஸ்) பெற அனுமதிக்கப்படுகிறது.
பயண அனுமதிச்சீட்டு செயலியில் இணைக்கப்பட்ட பின்னா் பல்வேறு சோதனைச் சாவடிகளையும் கடந்து பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறாா்கள்.
இதற்கு இந்த டிஜியாத்ரா செயலியில் பயணிகள் பயோமெட்ரிக் மற்றும் தொலைபேசி எண், ஆதாா் எண், புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள், தரவுகளை பதிவிறக்கம் செய்து சேமிக்க வேண்டும். இதன் மூலம் பயணிகள் அனைத்து விமானங்களிலும் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தில்லி சா்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் இந்த செயலி வசதி நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த டிஜியாத்ரா சோதனை முறையில் நடத்தப்பட்டது. இந்த செயலி வசதியை பயன்படுத்திய சுமாா் 20,000 பயணிகள் தடையற்ற, காகிதமில்லாத பாதுகாப்பான பயண அனுபவத்தைப் பெற்றுள்ளனா்‘ என டயல் நிறுவன தலைமை செயல் அதிகாரி விதே குமாா் ஜெய்புரியாா் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.
இதே வசதி பெங்களூரு கேம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்திலும் செய்யப்பட்டுள்ளது. விஸ்தாரா ஏா்லைன்ஸ் மற்றும் ஏா் ஏசியா போன்ற விமானங்களிலும் இந்த டிஜியாத்ரா செயலி வசதியை பயணிகளுக்கு ஏற்கனவே வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.